மஹான் நந்தீசர்
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.
- திருமந்திரம்
விளக்கம்:
திருக்கூத்தைக் கண்டு சிவயோகியர் அடையும் பெருமையும், அதைக் காணாது கீழ்மை நிலையில் ஆத்மாவின் சிறுமையும் அறிந்திருப்பவர் ஆதிபரன். அது போல ஒருமையுள் ஆமை போல் மனதை அடக்கி இருவினைகளையும் குற்றமில்லாமல் உணர்ந்து, ஆத்மாவின் அருமையையும் பரம்பொருளின் எளிமையும் அறிந்தவர் யாரெனின் சிவயோகியரே ஆவார்.
தெளிவுரை:
பொன்னம்பலத்தில் திருக்கூத்தைக் கண்டு கடைதேறும் சிவமுத்தர்களின் பெருமையையும், அவ்வழி நடவாமல் இறப்பு, பிறப்பென்ற கீழ் நிலையில் உழலும் சீவர்களின் சிறுமையையும், அறிந்திருப்பவரே ஆதிபரன்.
ஆமையானது தனக்கு துன்பம் நேரும் காலத்தில், தலையையும் கால்களையும் தனது ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும். அதுபோல் துன்பத்திற்கு காரணமான புலனைந்தையும், உயிரோடு ஒன்றச்செய்து அவற்றின் செயல்பாடுகளை தடுத்து, நல்வினை தீவினை இரண்டையும் குற்றமில்லாமல் உணர்ந்து, பரம்பொருளை அடைய உதவும் மனிதப்பிறப்பின் அருமையையும், அந்த மனிதப்பிறப்பிற்கு அருளும் பரம்பொருளின் எளிமையையும், அறிந்தவர் யாரெனின் சிவயோகியரே ஆவார்.
ஆத்மாவின் (மனிதப்பிறப்பு) அருமையையும், பரம்பொருளின் எளிமையையும் உணர்த்தியவாறு.
ஒம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம
18/05/2019 அன்று 'ஞானகுரு' "ஸ்ரீ நந்தி பெருமான்" அவதார திருநாளை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.