மஹான் சுக பிரம்மரிஷி
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
- திருமந்திரம்
விளக்கம்:
குற்றமற்ற பாலினுள் நெய்யானது கலந்திருப்பது போல், மறைக்கும் சிந்தை இல்லாத நல்குரு சொல்லாமல் சொல்வதை உணர்ந்து, உடம்பை இங்கு ஒழிக்கும் உபாயம் மேற்கொண்டால், வெட்டவெளியில் உள்ள அருட்பெருஞ் சோதியில் சத்தான ஆன்மா கலந்துவிடும்.
தெளிவுரை:
நல்ல பாலிலிருந்து காய்ச்சி தயிர் எடுத்து, தயிரை மோராக்கி, மோரைக் கடைந்து, வெண்ணை எடுத்து, வெண்ணெயை பதமாக காய்ச்சி நெய் எடுக்கப்படுகிறது. இங்கு நல்லபால் இருந்தால் மட்டுமே நெய் கிடைக்கும்.
அதுபோல் ஒரு நல்ல சீடனின் ஆத்மாவானது, மறைக்கின்ற சிந்தை இல்லாத நல்குரு சொல்லாமல் சொல்வதை உணர்ந்து, உடம்பை இயற்கையோடு இயற்கையாக கலக்கச் செய்து, உடம்பை இங்கு ஒழிக்கும் போது, வெட்டவெளியில் உள்ள அருட்பெருஞ்சோதியில் சித்தாக கலந்துவிடும்.
பாலிலிருந்து நெய் எடுப்பதற்கு எப்படி முறைகள் உள்ளதோ அப்படி, சாதாரண தேகமானது கற்பூர தேகமாக மாற்றுவதற்கும் சில முறைகள் உள்ளது. அதை நல்குரு மூலம் தெளிந்து செயல்பட வேண்டும்.
ஒரு நல்லசீடனின் வரையரையையும் ஒரு நல்குருவின் உயர்வையையும் கூறியவாறு.
21/06/2019 'மஹான் ஸ்ரீ சுக பிரம்மரிஷி' அவதார திருநாளை முன்னிட்டு 28/06/2019 அன்று "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.