மஹான்கள் திருமூலர் & இடைக்காடர்
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தோறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.- திருமந்திரம்
விளக்கம்:
எல்லாப் பொருள்களும் அடங்குகின்ற பேரண்டத் தில் அணுஅண்டம் சென்று அங்கு இடம் கொண்டதில்லை. ஆனால் அணுவுள் அண்டங்கள் அடங்கும், இதுவன்றி வேறுண்டோ. உடம்புதோறும் நின்ற உயிர்கள் கரை காண வேண்டும் என்றால் திருவடியை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
தெளிவுரை:
அணுவிலிருந்துதான் அண்டங்கள் தோன்றுகிறது. அதனால் மலை, கடல், மரம், உயிரினங்கள் எல்லாம் அடங்குகின்ற அண்டத்தில், அணுவானது சென்று இடங்கொள்ளாது. தன்னிலிருந்து உருவான அண்டத்தில், அணுவானது எப்படி இடங்கொள்ளும்.
காரணம் நிமித்தமே காரியம், காரியத்திற்காக காரணமில்லை. காரணத்துக்குள் காரியம் அடங்கும். காரியத்துக்குள் காரணம் அடங்காது.
உடம்புதோறும் நின்ற உயிர்கள் பிறவியெனும் கடலைக் கடப்பதற்கு, உடம்பையும் உயிரையும் இணைக்கின்ற சுவாசத்தை திடமாக பிடித்துக் கொள்ள வேண்டும். முறையான சுவாசமே திருவடியாகும். இந்த திருவடியை உறுதியாகப் பற்றிக்கொண்டால், பிறவிக் கரையை அடையலாம்.
உடம்புதோறும் உள்ள உயிர்கள் கரை காணுவதற்கு திருவடியே உபாயம் என்று உணர்த்தியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம
26/09/2019 அன்று 'மஹான்கள் திருமூலர் & இடைக்காடர் அவதார
தினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் அம்பத்தூரில் வழங்கப்பட்டது.