மஹான் அகத்தியர் பெருமான்
போதந் தருமெங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
-திருமந்திரம்
விளக்கம்:
அனுபவ ஞானத்தைத் தருகின்ற, எம் நல்வினையால் கிடைத்த சிவ குருவை அந்த ஞானத்திலே வைத்துக் கொண்டாடி புண்ணியராயினோம். அது எவ்வாறெனின் நாதனின் நடனத்தைக் கண்குளிரக் கண்டு, வேதம் துதித்திட விண்ணை அடைந்து புண்ணியரானோம்.
தெளிவுரை:
போதம் என்பது குருவின் அருளால் கிடைக்கும் பர அனுபவ அறிவாகும். இந்த பர அனுபவ அறிவே ஆத்மா கடைதேறுவதற்கு பெற வேண்டிய ஞானமாகும். விண்ணிலிருந்து பரம்பொருளின் கருணையினால் ஆத்மா வானது அவ்அவற்றின் வினைக்கு ஏற்ற உடம்பை கொண்டு, பின் மனித உடம்பை அடையும்போது மட்டுமே பரம்பொருளின் ஞானம் கிடைப்ப தற்கான தகுதி ஏற்படுகிறது.
ஆத்மாவானது மனித உடம்பு கிடைத்தவுடன் நல்குருவைத் தேடி தரிசனம் செய்து, குருவைப் போற்றி புகழ்ந்து தெண்டனிடல் வேண்டும். அதனால் மகிழ்ந்து குருவானவர், பரம்பொருளை அடைவதற்கு அவருடைய திருவடியைப் பிடித்து ஞானம் பெறுவதற்கு உபதேசிப்பார். அந்த திருவடி ஞானமே சிவமாக்குவிக்கும். போதமென்ற அனுபவ பர ஞானத்தைக் கொடுக்கும். அதனால் பொன்னம்பலத்தில் ஆடும் நாதனின் திருக்கூத்தைக் கண்குளிரக் கண்டு, தன்னிடமிருக்கிற குற்றங்கள் நீங்கி, தானும் பரிசுத்தமாகி வெட்டவெளியில் உள்ள சிவத்துடன், வேதங்கள் போற்ற தாமே சிவமாகி அடைகிறது வெட்டவெளியிலே.
பரஞானமே பரத்தை அடைவிக்கும் என்றவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
13-01-2020 அன்று 'மஹான் ஸ்ரீஅகத்தியர் பெருமான்' அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.