ஸ்ரீ ஞானேஸ்வரர்
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
- திருமந்திரம்
விளக்கம்:
சத்தம் முதலான தன்மாத்திரைகள் ஐந்தும் தான் எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே ஒடுங்கும்போது, சித்துக்குச் சேர்வதற்கான இடம் சித்தன்றி வேறுண்டோ எனில் இல்லை. சுத்த வெளியிலே உள்ள பரஞ்சுடரில் ஆத்மசுடர் சேரும். இது குறித்தான அர்த்தத்தை அனுபவ மெனும் உணர்விலே அறிந்து கொள்ளல் வேண்டும்.
தெளிவுரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மாத்திரைகளும் ஞானேந்திரியங்களின் மூலம் செயல் படுகிறது. இந்த தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களில் ஒடுங்கும்போது ஞானேந்திரியங்களின் செயல் அற்றுவிடும். அதனால் சத்தான சித்துக்கு பரசித்தன்றி சேர்வதற்கு வேறிடமில்லை. இந்நிலையில் வெட்டவெளியிலே அருட் பெருஞ்சோதியில் ஆத்மசுடர் சேரும். இதற்கான தெளிவை அனுபவமெனும் உணர்வின் மூலம் தெரிந்து கொள்ளல் வேண்டும். பஞ்சபூதங்களின் விருத்தியே உலக இயக்கமாகும். இயற்கையாக ஐம்பூதங்கள் நிறைந்து அண்டத்தை இயக்குவது போல பிண்டத்திலும் இருந்தும் இயக்குகிறது. ஐம்பூதங்களும் நேரிடையாக செயல் படுவதில்லை. மனித உடம்பில் ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, காது ஆகியன மூலம் தன்மாத்திரைகளாக வெளிப்பட்டு செயல்படுகிறது.
ஐம்பொறிகள் ஒடுங்குவதன் மூலம் சித்துக்கான நிலையை விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம
12/07/2019 ல் 'மஹான் ஞானேஸ்வரர்' அவதார திருநாளை முன்னிட்டு 21/07/2019 அன்று "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.