திருவாசகம் முற்றோதுதல்
தானே புலன்ஐந்தும் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. - திருமந்திரம்
விளக்கம்:
குருவின் அருளினால் ஆத்மாவானது பரிபக்குவம் அடையும்போது புலனைந்தும் தானே ஆத்மாவின் வசமா யிடும். பின் தன்வசத்திலிருந்து பரம்வசம் போயிடும். இது எவ்வாறெனில் தன்வசத்திலிருந்த புலனைந்தும் மடைமாறி பரம்வசமாகிறது. ஆதிப்பிரானை ஆத்மா தனித்து சந்திக்கும் போது புலனைந்தும் மடைமாறுகிறது.
தெளிவுரை:
ஆத்மாவானது இயல்பாக கீழ்நோக்கி இழுக்கும் ஐம்புலன்களின் வசமாகி, தன் பிறப்புக்குரிய உயர்வை அறியாமல் கெடுகிறது. இதிலிருந்து விடுபட்டு வழிமுறை தெரிந்து உய்வதற்கு, முதலில் நல்குருவைத் தேடி சரணடைய வேண்டும். இப்படி சரணடையும்போது குருவின் அருளினால் ஆத்மாவா னது பரிபக்குவம் அடைந்து, புலனைந்தும் தானே தன்வசமாகிறது. பின் புலனைந்தும் பரம்வசமாகிறது. இது எவ்வாறெனில் குருவின் அருளினால் பரம்பொருளின் சந்நிதியில் தனித்து இருக்கும்போது, ஆத்மா வசமான புலனைந்தும் மடைமாற்றி பரம்வசமாகிறது.
புலனைந்தும் குருவின் அருளினால் ஆத்மாவசம் இருக்கும்போதும், புலன்களின் செயல்பாடு உண்டு. ஆனால் வெளிப்பாடு இல்லாமல் அடங்கியிருக்கும். பரம்பொருளோடு தனித்து சந்திக்கும்போது மட்டுமே புலன்கள் மடைமாறி நீர்த்துபோய், அதன் கீழான இயல்பிலிருந்து மேலான நிலைக்கு மாற்றப்படுகிறது.
புலன்களின் மடைமாறும் தன்மையை விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
29-12-2019 அன்று திருமுல்லைவாயல் மாசிலாமணிஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் நடைபெற்றது.